அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

Update: 2022-12-05 23:36 GMT

அண்ணாமலையார் கருவறை முன்பு சிவாச்சாரியார்கள் பரணி தீபம் ஏற்றினர் உடன் அமைச்சர் மற்றும் அதிகாரிகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் இன்று ஏற்றப்படுகிறது.

அதன்படி இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதில், அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் , சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் சிகரமாக மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது. மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்துடன் 4,500 லிட்டர் நெய், தீபத்திற்கு தேவையான காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்து வருகின்றனர்.

அவர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்படுவதால் அந்த பேருந்துகளும் நிரம்பியவாறு திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

கடந்த ஆண்டுகளில் இருந்தது போன்று தீபத் திருவிழாவின் போது பொதுமக்களுக்கு இடையூறாக காவல்துறை வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதை தவிர்க்க வேண்டும் என்று தீபத் திருவிழா ஆலோசனை கூட்டத்தின் போது காவல் துறையினருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் முருகேஷ் ஆகியோர் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் நேற்று திருவண்ணாமலை நகரில் எங்கு பார்த்தாலும் காவல்துறை வாகனங்களே அணிவகுத்து சென்றன. ஒவ்வொரு உயர் அதிகாரிகளின் வாகனங்களின் பின்புறமும் அதிரடிப்படையினர் வாகனங்களும் அதிவேத்தில் சென்றன. இன்று டிசம்பர் 6-ந் தேதி என்பதால் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மகா தீபத்திற்கு முந்தைய நாளான நேற்று முதலே திருவண்ணாமலை நகர சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக இருசக்கர வாகனங்களில் சென்று வர முடியாத அளவிற்கு ஆங்காங்கே தடுப்பு அமைக்கப்பட்டு இருந்ததால் உள்ளூர்  பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

கிரிவலப்பாதையிலும் தொடர்ந்து காவல்துறையினர்ரோந்து பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு  கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News