திருவண்ணாமலை: 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயன்ற பெண்

குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் 7 மாத குழந்தை உயிரிழந்தது.

Update: 2022-04-29 07:41 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை விவசாயி. இவரது மனைவி கமலா. இவர் திருவண்ணாமலை எடப்பாளையம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் 7 மாத கைக்குழந்தையை கிணற்றில் வீசி விட்டு 4 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்தார்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ஓடி வந்து கிணற்றில் குதித்து அந்த பெண்ணையும், 4 மாத குழந்தையையும் உயிருடன் மீட்டனர். ஆனால் 7 மாத ஆண் குழந்தையை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி கைக்குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையை பிணமாக மீட்டனர். மீட்கப்பட்ட பெண்ணுக்கும், அந்த பெண் குழந்தைக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் 7 மாதத்தில் ஆண் குழந்தை இருந்தது. ஆண் குழந்தைக்கு உடல் நல குறைப்பாட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனவேதனை அடைந்த கமலா மருத்துவமனை செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது அவர் 4 வயது மகள் மற்றும் 7 மாத கைக்குழந்தையுடன் திருவண்ணாமலை எடப்பாளையம் பகுதிக்கு வந்து அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News