திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமத்தில் வைகாசி விசாக விழா

திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் வைகாசி விசாக விழா நடைபெற்றது.

Update: 2024-05-23 01:21 GMT

சிறப்பு அலங்காரத்தில்  கிருஷ்ணர் விக்ரகம்

வைகாசி விசாக தினத்தன்று குழந்தை சேஷாத்திரிக்கு தங்கத்தை சேஷாத்திரி பெயர் வர காரணமான தினமாகும்.

வரதராஜ பெருமாள் ஆலயத்தில் நடக்கும் முக்கியமான திருவிழாக்களில் வைகாசி மாத விசாகத்தில் நடக்கும் தேர் திருவிழாவும் ஒன்று. ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் குழந்தையாக இருந்த போது தனது தாயாருடன்  வைகாசி விசாக நாளன்று உற்சவ நேரத்தில் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழியில் பலவிதமான கடைகள் போட்டு ஊரே கொண்டாட்டமாக இருந்தது. அப்போது, ஒரு பொம்மை வியாபாரி, கிருஷ்ணர் பொம்மைகளை வைத்து விற்றுக் கொண்டிருந்தார்.  அதிலிருந்த அழகான கிருஷ்ணர் பொம்மைகளை பார்த்த குழந்தை சேஷாத்ரி தனக்கும் ஒரு பொம்மை வேண்டும் என கேட்க, அவரது தாய்க்கு பொம்மை வாங்க விருப்பமின்றி, குழந்தை அழ அழ, வேகமாக நடந்தாள்.

இதைக் கண்ட பொம்மைக் கடைகாரர், “அம்மா, குழந்தையை அழ விடாதீர்கள், ஆசையாக கேட்கிறது, எனது முதல் பொம்மைக்கு காசு வேண்டாம், ஒரு பொம்மையை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூற, குழந்தையான சேஷாத்ரி, ஆர்வமாக, ஒரு கிருஷ்ணர் பொம்மையைத் தானே எடுத்துக் கொண்டார். மறுநாள் காலை, அன்னையுடன் கோவிலுக்கு செல்லும்போது, அந்த வியாபாரி, தாயின் காலில் விழுந்து வணங்கினார்.  அம்மா, திருவிழா நாட்களில், நூறு பொம்மை விற்பதே, கடினம், நேற்று உங்கள் குழந்தை கை பட்டதால் ஆயிரத்துக்கும் மேலான பொம்மைகள் விற்று விட்டன.  இன்னும் நிறையபேர் கேட்கிறார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று கூறிக்கொண்டு குழந்தை சேஷாத்ரியின் கையைப் பிடித்து, கண்களில் ஒற்றிக்கொண்டு இது தங்கக்கை அம்மா தங்கக்கை என்று மகிழ்ச்சியுடன் கூத்தாடினார். இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு காஞ்சி நகரம் முழுவதும் பரவியதும் குழந்தை சேஷாத்ரியை தங்கக்கை சேஷாத்ரி என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த அற்புத நிகழ்வு நடந்த வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது.

தொடர்ந்து அங்குள்ள கிருஷ்ணர் விக்கிரகத்திற்கு சிறப்பு அலங்காரமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு நீர் மோர் சிறப்பு அன்னதானங்கள் நேற்று காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து வழங்கப்பட்டது.

Tags:    

Similar News