கார்த்திகை தீபத் திருவிழாவில் சேவையாற்ற திருப்பூரில் அழைப்பு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் பங்கேற்று, சேவையாற்ற, திருப்பூரில் உள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-25 11:13 GMT

திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவில் சேவையாற்ற அழைப்பு.

திருவண்ணாமலையில், வரும் 6ம் தேதி, கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில், பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா தொற்று காரணமாக, இவ்விழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடந்த நிலையில், இம்முறை வழக்கமான உற்சாகத்துடன் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

பக்தர்களின் வசதிக்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள், திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்தி, ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன், அங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பல்வேறு அமைப்புகள் சார்பிலும், அன்னதானம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆன்மிக அமைப்புகள், பக்தி சேவை அமைப்புகள் திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பங்கேற்று, தங்களது அமைப்புகளின் சார்பில், சேவை செய்கின்றனர். அன்னதானம் வழங்குதல், குடிநீர் வினியோகம், மருத்துவ  சேவை, கூட்டத்தை கட்டுப்படுத்துதல், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில், ஈடுபடுகின்றனர். அந்த வகையில், ஆன்மீக சேவையாற்றிய நிம்மதியை பெறுகின்றனர். இதில், சேவையாற்ற தன்னார்வலர்களும் திரளாக கலந்துகொள்கின்றனர்.

இதுகுறித்து, திருப்பூரில், 'திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபவிழா அன்னம்பாலிப்பு திருப்பணிக்குழு' செயலாளர் சண்முகசுந்தரம் கூறியதாவது:

வருகிற 6-ம்தேதி (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை, ஸ்ரீஅண்ணாமலையார் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா துவங்கவுள்ளது. இதனை முன்னிட்டு எமது "திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபவிழா அன்னம் பாலிப்பு திருப்பணிக்குழு" சார்பில் 40-வது ஆண்டாக  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, பக்தர்களின் வசதிக்காகவும், பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டும், அங்குள்ள 18 திருமண மண்டபங்களில், கடந்த 39 ஆண்டுகளாக எமது திருப்பணிக்குழு சார்பில், ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் இச்சேவை செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட பக்தர்களின் பங்களிப்பாக ஆண்டுதோறும்  5 டன் காய்கறிகள்,  30 லட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் நன்கொடையாகப் பெறப்பட்டு இச்சேவா காரியத்திற்காக தொடர்ந்து அனுப்பப்படுகிறது. மேலும்  500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இங்கிருந்து வரவழைக்கப்பட்டு, அங்குள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு அன்னதானம் வழங்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் தன்னார்வமாக கலந்துகொண்டு, அன்னதானப்பணிகளில் சேவையாற்ற, இந்தாண்டும் சேவார்த்திகள் வேண்டப்படுகிறார்கள். விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் அன்னதானத்திற்கு மளிகைப்பொருட்கள் கொடுக்க விரும்புவோர், திருப்பணிக்குழுவின் இணைச்செயலாளர் முருகேசன் , பொருளாளர் மோகன சுந்தரம் ஆகியோர்களை 94434 79279, 93616 26363 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News