தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 61 நாட்களுக்கு பிறகு மீன் விற்பனை தொடங்கியது..! - மீன்வரத்து அதிகம் மீனவர்கள் மகிழ்ச்சி!!

Update: 2021-06-16 08:46 GMT

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 61நாட்களுக்கு பிறகு மீன் விற்பனை நேற்று இரவு தொடங்கியது. கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கிச் சென்றனர்.

மீன்பிடி தடைக்காலதிற்கு பின் கடலுக்கு சென்ற முடிந்து விசைப்படகு மீனவர்கள் எதிர்பார்த்த மீன்வரத்து கிடைத்த மகிழ்ச்சியில் கரை திரும்பினார்கள். தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய 950கி.மீ நீள கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பின் மூலம் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்பதால் மத்திய அரசு ஆண்டுதோறும் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு தடைவிதித்து வருகிறது.

நாட்டின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் ஏப்ரல் 14ம்தேதி முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த தடை நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில் நேற்று அதிகாலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 120 விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றனர். இரவு 9 மணி முதல் மீன்பிடிப்பிற்கு சென்ற விசைப்படகுகள் கரை திரும்பினர். அயிலை, வஞ்சிரம், பாறை, சாளமீன், காரல் மற்றும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் விளமீன், சீலா, வருவால் ஊழி, கருப்பு ஊழி உள்ளிட்ட அனைத்து மீன் வகைகளையும் பிடித்து வந்துள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் மீன்பிடித் தடைக்காலத்திற்குப் பின் மீன்தேவை அதிகம் உள்ள நிலையில் மீன்வரத்தும் எதிர்பார்த்த அளவு கிடைத்துள்ளதாக மீனவர்கள்‌ மகிழ்ச்சி தெரிவித்தனர். 61 நாள் தடைக்காலம் முடிந்து நடைபெறும் மீன்பிடிப்பு என்பதால் வெளிமாவட்டத்தை சார்ந்த நூற்றுக்கணக்கான மீன்வியாபாரிகள் தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்தில் நேற்று மாலை முதலே வந்து முகாமிட்டனர். கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து மீனவர் ஜான்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து இரண்டு மாதங்களுக்கு பின்னர் இன்று மீனவர்கள் ஆகிய நாங்கள் கடலுக்குச் சென்று திரும்பி வந்துள்ளோம். அரசின் அறிவுறுத்தல்படி கொரோனா கட்டுபாட்டு வழிகாட்டுதல்களை பின்பற்றி முகக்கவசம் அணிந்தும், கைகளை சோப்பு திரவத்தால் சுத்தப்படுத்தியும் சமூக இடைவெளியுடன் மீன்பிடித்தலில் ஈடுபட்டு திரும்பியுள்ளோம். 61 நாள் தடைக்காலத்துக்கு பின் மீன்பிடித்ததால் எதிர்பார்த்த அளவு மீன்வரத்து கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.



Tags:    

Similar News