அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் -அமைச்சர் தகவல்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் அமைச்சர் தெரிவித்துள்ளார்

Update: 2021-06-02 08:56 GMT

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்றால் ஆங்காங்கே சில இடங்களில் சிறுவர்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை அல்லாத இடங்கள் தயார் படுத்தபட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் அடைக்கலாபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 இடங்களில் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தூத்துக்குடி ஆறுமுகசாமி அன்பு ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறார்களுக்கான கொரோனா சிகிச்சை மையத்தை இன்று தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா தொற்றால் இதுவரை 361 சிறார்கள் பாதிக்கப்பட்டு பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அது போன்று பாதிக்கப்பட்டும் சிறார்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனியாக சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் பெற்றோர்களை இழந்துள்ளதாக தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 72 குழந்தைகளிடமிருந்து மனுக்கள் வந்துள்ளன. அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் அறிவித்த 5 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை வழங்கப்படும். அவருடைய படிப்பிற்காக மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்துள்ள குழந்தைகள் பற்றி கணக்கெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை திருமணங்கள் அதிகரித்து உள்ளது குழந்தை திருமணங்களை தடுப்பதற்காக பஞ்சாயத்து அளவிலான குழுக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தவும் குழந்தை திருமணங்களை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல்துறையில் உள்ள அதற்கான தனி பிரிவை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் கூறினார்.

முன்னதாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த இளம்பெண்ணின் சகோதரர் சுந்தரிடம் திமுக சார்பில் நிவாரண தொகை தொகை ரூ. 1 லட்சதம் ரூபாய் அமைச்சர் வழங்கினார்.

ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News