முதியவரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

முதியவரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

Update: 2021-09-24 03:17 GMT

கயத்தூறு அருகே முதியவரை வெட்டிக் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை ரூ.1000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 23.01.2019 அன்று தூத்துக்குடி மாவட்டம், கயத்தூறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு இலந்தைகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சண்முகராஜ் மனைவி காளீஸ்வரி (26) என்பவர் தனது குழந்தையை திட்டியதை அதே பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் பாலமுருகன் (27) என்பவர் தனது தாயாரை திட்டியதாக கருதி காளீஸ்வரியை அரிவாளால் தாக்க முயன்றுள்ளார், அப்போது தடுக்க வந்த காளீஸ்வரியின் தாத்தாவான முத்தையா மகன் ஆறுமுகம் (எ) ஆறுமுகபெருமாள் (60/19) என்பவரை மேற்படி பாலமுருகன் அரிவாளால் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் ஆவுடையப்பன் என்பவர் புலன் விசாரணை செய்து 19.03.2019 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன் இன்று (23.09.2021) குற்றவாளி பாலமுருகன் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கயத்தாறு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆவுடையப்பன், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சுபாஷினி, விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர்கள் சுடலைமணி மற்றும் அழகுமுத்து பாண்டியன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

Tags:    

Similar News