தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 259 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு…

தூத்துக்குடி மாவட்டத்தில், நடப்பு ஆண்டில் இதுவரை 259 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2022-12-08 12:33 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது உடனடியாக குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், மாவட்டத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைதான 3 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பான விவரம் வருமாறு:

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்படி இசக்கியம்மன் கோவில் அருகே கடந்த மாதம் 10 ஆம் தேதி தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த சார்லஸ் (வயது 48) என்பவர் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த தென்பாகம் போலீஸார் முன்விரோதம் காரணமாக கொலை நிகழ்ந்து இருப்பதாகவும், சார்லஸ் கொலை தொடர்பாக தூத்துக்குடி சின்னமணி நகரை சேர்ந்த சின்னமுத்து (39), அஜய் (19) மற்றும் எட்டையாபுரம் துரைசாமிபுரத்தைச் சேர்ந்த குருசாமி (38) ஆகியோரை செய்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையே, கொலை வழக்கில் கைதான சின்னமுத்து, குருசாமி மற்றும் அஜய் ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளர் ராஜாராமின் அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், கொலை வழக்கில் கைதான தூத்துக்குடி சின்னமணி நகரைச் சேர்ந்த சின்னமுத்து, அஜய் மற்றும் எட்டையாபுரம் துரைசாமிபுரத்தைச் சேர்ந்த குருசாமி ஆகியோரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் கொலை வழக்கில் கைதான 3 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 பேர் உட்பட 259 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

Tags:    

Similar News