தூத்துக்குடி மாவட்ட க்ரைம் செய்திகள்…

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.

Update: 2022-12-22 12:35 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில், சில பகுதிகளில் நிகழ்ந்த க்ரைம் செய்திகள் குறித்த விவரங்ளை தெரிந்து கொள்வோம்.

செல்போன் திருடியவர் கைது:

திருவண்ணாமலை மாவட்டம், கீழவணக்கம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (24). இவர், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் வரவேற்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று லாட்ஜில் வரவேற்பு அறையில் ராஜேஷ் தனது செல்போனை வைத்துவிட்டு தூங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து பார்க்கும்போது அந்த செல்போனை காணவில்லை.

இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் போலீஸார் தீவீர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தெற்கு ஆரைக்குளம் பகுதியைச் சேர்ந்த பாப்புராஜ் (32) என்பவர் ராஜேஷின் செல்போனை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் பாப்புராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்த திருடப்பட்ட ரூபாய் 9,000 மதிப்புள்ள செல்போனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது:

தூத்துக்குடி கே.வி.கே நகரை சேர்ந்தவர் ஏகாம்பரநாதன் (வயது 21). இவர், கடந்த 16.12.2022 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.எம்.எஸ் நகர் அருகே வந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஏகாம்பரநாதனிடம் இருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஏகாம்பரநாதன் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீஸார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தூத்துக்குடி விஸ்வாபுரத்தைச் சேர்ந்த மாதவன் (21), தூத்துக்குடி தேவர் காலனியை சேர்ந்தவர்களான இன்பராஜ் (20) மற்றும் சூரிய பிரகாஷ் (19) ஆகியோர் சேர்ந்து ஏகாம்பரநாதனின் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்குபதிவு செய்து, மாதவன், இன்பராஜ் மற்றும் சூரிய பிரகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த திருடப்பட்ட ரூபாய் 20,0000 மதிப்புள்ள செல்போனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

காஞ்சாவுடன் இளைஞர் கைது:

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில், மத்தியபாகம் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் ராஜாராம் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் தூத்துக்குடி ரஹ்மத்துல்லாபுரம் பகுதியை சேர்ந்த ஷேக் ரசூல் (27) என்பதும், அவர் இருசக்கர வாகனத்தில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே ஷேக் ரசூலை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா, ரொக்க பணம் ரூபாய் 68,650 மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News