பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினரின் வாரிசுகளுக்கு பரிசு வழங்கல்...

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினரின் வாரிசுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-01-25 08:06 GMT

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினரின் வாரிசுகளுக்கு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிசு வழங்கினார்.

தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் வாரிசுகளில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து அவர்களுக்கு முதல் இடம் பிடித்தவருக்கு ரூபாய் 7,500-ம், இரண்டாம் பிடித்தவருக்கு ரூபாய் 5,500-ம், மூன்றாம் இடம் பிடித்தவருக்கு ரூபாய் 3,500-ம் 4 முதல் 10 ஆவது வரை உள்ள இடங்களை பிடித்தவர்களுக்கு ரூபாய் 2,5௦௦ ம் வழங்கப்படும்.

அதன்படி, 2022 ஆம் ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்த காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி பரிசுத் தொகையை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் அமைச்சுப்பணி உதவியாளர் கிருஷ்ணம்மாள் மகள் லதா சுப்பிரியா, உதவி ஆய்வாளர் மாரியப்பன் மகள் மதுமிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் மகன் ஜெயவிக்னேஷ், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியன் மகள் ஆர்த்தி, மொகைதீன் அலி மகன் சரோத் ஜகான், சீனிவாசன் மகள் ஹரிணி, முத்துகிருஷ்ணன் மகள் அங்காள பரமேஸ்வரி, சிறப்பு உதவியாளர் சந்தனராஜ் மகள் புஷ்கலா தேவி, தலைமை காவலர்கள் வடிவேல் மகள் ரேஷ்மதி மற்றும் தங்கமாரியப்பன் மகன் ஹரிஹரன் ஆகியோருக்கு கல்வி பரிசுத் தொகையை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கினார்.

மேலும், பரிசுப் பெற்ற அனைவரும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வாழ்த்தினார். நிகழ்வின்போது காவல்துறை அமைச்சுப்பணி கண்காணிப்பாளர் மயில்குமார், உதவியாளர் அனிதா கிருஷ்ணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News