தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 373 பேர் விபத்தில் உயிரிழப்பு.. ஆட்சியர் தகவல்…

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு விபத்தில் 373 பேர் உயிரிழந்துள்ளனர் என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

Update: 2023-01-18 10:07 GMT

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாமை ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

சாலை பாதுகாப்பு வார விழாவின் இறுதிநாளான இன்று, தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து, அவர் ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியதாவது:

மருத்துவருக்கு அடுத்த படியாக மக்கள் ஓட்டுநர்களைதான் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள். எனவே, அவர்களின் நலன் கருதி மருத்துவ முகாம் நடைபெறுகிறது. சாலை பாதுகாப்பிற்காக அரசு நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தினை முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

இந்தத் திட்டத்தின் மூலம் விபத்துக்குள்ளானவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்குள் இலவசமாக அவசர சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் விபத்தினால் ஏற்படும் மரணங்களை தவிர்க்கலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 324 விபத்து மரணங்களும், 2021 ஆம் ஆண்டு 394 விபத்து மரணங்களும், 2022 ஆம் ஆண்டு 373 விபத்து மரணங்களும் ஏற்பட்டுள்ளன. சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்தால் விபத்து இல்லாத தமிழ்நாட்டினை உருவாக்க முடியும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:

வாகன ஓட்டுநர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் பயணிகளுக்கு பாதுகாப்பு இருக்கும். பயணிகளை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் கடமை உங்களுக்கு இருக்கிறது. பள்ளிகளில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

லாரி ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். தூத்துக்குடியில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏராளமான இடவசதிகள் உள்ளன. சாலைகளில் பாதுகாப்பாக வாகனங்களை இயக்கி தமிழ்நாட்டினை விபத்து இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்ச்செல்வன், தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் பிரைட்டன், தன்னார்வ தொண்டு நிறுவனங்களான யங் இந்தியா மற்றும் எம்பவர் தொண்டு நிறுவன பிரதிநிதிகள், அரசு போக்குவரத்து பணிமனை ஓட்டுநர்கள், ஓட்டுநர் பயிற்சி மைய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News