வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்.. தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு முகாம்..

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-24 12:16 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்- 2023 பணியானது கடந்த 9 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்காளர்களிடம் இருந்து மனுக்கள் பெற்று வருகின்றனர்.

மேலும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 61 சதவிகிதம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து உள்ளனர்.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்திடவும் மனுக்கள் பெற்றிட நவம்பர் 26 ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

அன்றையதினம் நடைபெறும் சிறப்பு முகாமின்போது காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விண்ணப்பங்களை அளிக்கலாம். 01.01.2023 அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் அதாவது 31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரினை சேர்க்க படிவம்- 6, பெயரினை நீக்கம் செய்திட படிவம்- 7, ஏற்கெனவே உள்ள பதிவுகளில் திருத்தம் செய்திட, வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் செய்திட மற்றும் வேறு சட்டமன்ற தொகுதியில் உள்ள பதிவினை தற்சமயம் வசிக்கும் முகவரிக்கு மாற்றம் செய்திடவும் படிவம்- 8 பூர்த்தி செய்து அளித்திட வேண்டும்.

இதுதவிர, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைத்திட படிவம்-6பி அளிக்க வேண்டும். மேலும் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter helpline என்கிற மெபைல் செயலி மூலமாகவும் உரிய ஆவணங்களுடன் பொது மக்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடலாம்.

வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணியில் பெறப்படும் விண்ணப்பங்கள்; அனைத்தும் பரிசீலனை மற்றும் கள ஆய்வு செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் பொதுமக்கள் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களையோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண்-1950-யை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகம், கோரிக்கை தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News