ஐடிஐயில் தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்: ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி அரசு ஐ.டி.ஐ.யில் அக்டோபர் 4ம் தேதி தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

Update: 2021-09-26 08:33 GMT

தூத்துக்குடி அரசு ஐ.டி.ஐ.யில் அக்டோபர் 4ம் தேதி தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், அக்டோபர் 4ம் தேதி திங்கள் கிழமை அன்று காலை 9 மணி முதல் தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்திற்கான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற இருக்கின்றது.

இதில் ஐ.டி.ஐ தேர்ச்சிப் பெற்ற பயிற்சியாளர்கள், ஐடிஐ தேர்ச்சி பெற்று அப்ரண்டீஸ் பயிற்சி பெறாதவர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த/தோல்வியடைந்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 500 க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இப்பயிற்சியின்போது உதவித் தொகை மாதம் ரூ.7700/- முதல் ரூ.10,000/- வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழிற் பழகுநர் சட்டம் 1961-ன்படி, மத்திய, மாநில அரசு பொதுத்துறை மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு முதல் இரண்டாண்டுகள் வரை தொழிற் பழகுநர் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (NAC) வழங்கப்படும். இம்முகாமில் கலந்து கொண்டு தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை பெற்று பயனடைய அழைக்கின்றோம்.

மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய கோரம்பள்ளத்திலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தூத்துக்குடி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2340041 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News