திருமண மண்டபங்களில் கொரோனா விதிமீறல்: தூத்துக்குடி கலெக்டர் எச்சரிக்கை
திருமண மண்டபங்களில் கொரோனா விதிமீறல்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என, தூத்துக்குடி கலெக்டர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 18 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் 14 லட்சத்து 58 ஆயிரத்து 230 பேர் ஆவர். இதில் முதல் தவணை தடுப்பூசியை 5 லட்சத்து 46 ஆயிரத்து 61 ரே் செலுத்தி உள்ளனர். 37 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
குறைந்தபட்சம் நாம் 80 சதவீதம் வரை தடுப்பூசி செலுத்த வேண்டும். இதற்கு மொத்தம் சுமார் 11 லட்சம் பேர் வரை தடுப்பூசி செலுத்த வேண்டும். அதே போன்று 2-வது தவணை தடுப்பூசியை 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர். மற்ற மாவட்டங்களை விட தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் குறைவாக உள்ளனர். மாவட்டத்தில் தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிக அளவில் கையிருப்பு உள்ளது. மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளன. ஆனால் பொதுமக்கள் அதிக அளவில் தடுப்பூசி போட ஆர்வம் இல்லாமல் உள்ளனர்.
வரும் 12-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கு 605 குழு அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் 403 பஞ்சாயத்து, ஒரு மாநகராட்சி, 2 நகராட்சி, 19 பேரூராட்சிகளில் நடத்தப்படும் முகாம்களில் பணியாற்ற உள்ளனர். இதுதவிர 50 நடமாடும் மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மாற்றுத்திறனாளிகள், வீடுகளில் இருந்து வெளியில் வர முடியாத முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளனர்.
இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக பல வீடியோக்கள் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும் கிராமங்களில் ஆட்டோக்கள் மூலமும், துண்டு பிரசுரங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
மாவட்டத்தில் திருமண விழாக்களில் பலர் முககவசம் அணியாமல் உள்ளனர். பொதுமக்கள் திருமண விழாக்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். புகைப்படம் எடுப்பதற்காக முககவசத்தை கழற்ற வேண்டாம். இதனை கண்காணிக்க 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். திருமண மண்டப உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எந்தவித ஊர்வலத்துக்கும் அனுமதி கிடையாது. தனிநபர்கள் மட்டும் வீ்ட்டில் வைத்து விநாயகர் சிலைகளை வழிபடலாம். இவ்வாறு கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.