தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு டிஜிபி பாராட்டு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-23 12:48 GMT

தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் இருந்து எஸ்.பி. பாலாஜி சரவணன் சான்றிதழ் பெற்றார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, குயின் ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனம் பொதுமக்களிடம் ஈமு கோழிகள் மீது முதலீடு செய்யும் பணத்திற்கு அதிகமான தொகை திரும்ப கிடைக்கும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, பல முதலீட்டாளர்களுக்கு திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2012 ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவையில் 306 முதலீட்டாளர்களிடம் ரூ.5,65,83,840 மற்றும் ஈரோட்டில் 829 முதலீட்டாளர்களிடம் ரூ. 26,58,32,570 ஏமாற்றப்பட்டதற்காக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரு வழக்குகளிலும் 18.02.2023 அன்று கோயம்புத்தூர் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் இரண்டு வழக்குகளிலும் மயில்சாமி மற்றும் சக்திவேல் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கோயம்புத்தூர் வழக்கில் ரூ.5,68,48,000 அபராதமும், ஈரோடு வழக்கில் ரூ. 28,72,32,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வழக்கை திறம்பட விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பை மீட்டுத் தந்த அப்போதைய காவல் அதிகாரியும், தற்போதைய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான பாலாஜி சரவணனுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்தார்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் இந்த வழக்கில் திறம்பட செயல்பட்ட காவல் அலுவலர்களுக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ்களை வழங்கி காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு பாராட்டினார்.

Tags:    

Similar News