தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்..

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-11 11:25 GMT

பைல் படம்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சிறுபான்மையினர், பட்டியல் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு தனித்தனியே உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல, தற்போது அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எந்தவித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பட்டயபடிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்பு பயிலுபவர்களுக்கு குடும்பத்தில் முதல் பட்டய, பட்டதாரியாகவும் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ .2,50,000 -க்கு மிகாமலும் இருக்கும் பட்சத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். அதுமட்டுமின்றி முதுகலை, ஐடிஐ, பாலிடெக்னிக், தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயிலுவோரும் இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இரண்டாவது முறை மாற்றம் பயிலும் மாணவ, மாணவிகளும் இந்தக் கல்வி உதவித்தொகை பெறலாம். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியகள் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பப் படிவங்களை நவம்பர் 15 ஆம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவங்களை டிசம்பர் 15 ஆம் தேதிக்குள்ளும் பூர்த்தி செய்து கல்லூரிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வழங்கப்பட உள்ளதால் வங்கிக் கணக்கு எண், வங்கியின் IFSC Code தவறாது சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கிறித்தவ மதத்திற்கு மதம் மாறிய ஆதி திராவிட மாணவ, மாணவிர்கள் மற்றும் வேறு துறைகள் மூலம் (ஆதிதிராவிடர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் சமூக நலத்துறை) கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் இந்தத் துறை மூலம் கல்வி உதவித்தொகை பெற இயலாது.

கல்வி நிலையங்கள், இணையதளம் மூலம் புதுப்பித்தலுக்கான கேட்புகள் டிசம்பர் 6 ஆம் தேதிக்குள்ளும், புதியதற்கான கேட்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதிக்குள்ளும் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் கல்வி நிலையங்கள் மாணவ, மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, கைப்பேசி எண், ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் வங்கியின் IFSC Code ஆகியவை சரிபார்த்து கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பிழையின்றி பதிவிட வேண்டும்.

இந்தத் திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் அரசு இணையதளத்தில் (https://www.bcmbcmw.tn.gov.in.welfschemes.htm#scholarshipschemes) உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News