தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை!! ஷாக் கொடுத்த வேதாந்தா நிறுவனர்..!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்போம் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-30 05:36 GMT

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்போம் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் காப்பர் உருக்கு ஆலையால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. புற்றுநோய் பாதிப்பு, சுற்றுச்சூழல் சீர்கேடுகள் என அதிர்ச்சியூட்டும் புகார்கள் எழுந்தன. எனவே ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து வழக்கு, நீதிமன்ற விசாரணை என நீண்டு மே 2018ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கான தீர்ப்பு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்போம் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 4 ஆயிரத்து 397 பேர் நேரடியாகவும், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று வந்தனர். தூத்துக்குடி ஆலை மூடப்பட்டதில் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆலையை திறக்க அழைப்பு வந்தது. ஆனால் நாங்கள் அவசரப்பட்டு எதையும் செய்ய விரும்பவில்லை. வேறு மாநிலம் செல்லலாம் ஆனால் தூத்துக்குடியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறோம். நாங்கள் அங்குள்ள மக்களை விரும்புகிறோம், உள்ளூர் மக்களின் நம்பிக்கையையும் நாங்கள் பெற்றுள்ளோம். உள்ளூர் மக்கள் ஆலை திறக்கப்படுவதை விரும்புகின்றனர். ஆகவே தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்போம் என நம்பிக்கை தெரிவித்தார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News