ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்த விளாத்திக்குளம் இளைஞரின் கதறல் வாய்ஸ்

Online Gaming News -ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட விளாத்திக்குளம் இளைஞர் தனது தாயாருக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் கிடைத்துள்ளது.

Update: 2022-10-27 06:25 GMT

தற்கொலை செய்து கொண்ட இளைஞர் பூபதிராஜா.

Online Gaming News -விளையாட்டு விபரீதத்தில் முடியும் என்ற வார்த்தைக்கு முழுமையான எடுத்துக்காட்டாக திகழ்வது செல்போனில் நாம் விளையாட்டாக விளையாடத் தொடங்கும் ஆன்லைன் ரம்மி என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆன்லைன் ரம்மியால் வாழ்க்கையை இழந்த பல சம்பவங்கள் குறித்து அறிந்த போதிலும் உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

ஆன்லைன் ரம்மி விளையாட அரசு தடை விதித்துள்ள போதிலும், இதற்கு முன்பு ஆன்லைன் ரம்மி மூலம் பணத்தை இழந்த பலர் பித்துப் பிடித்து அலைவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. சாப்ட்வேர் இன்ஜினீயர் குடும்பத்துடன் தற்கொலை, போலீஸ்காரர் தற்கொலை, வியாபாரி தற்கொலை, மாணவர் தற்கொலை என ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து உயிரைவிட்டவர்களின் பட்டியலில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த பூபதிராஜா என்ற 27 வயது இளைஞரும் தற்போது இணைந்துள்ளார்.

டிப்ளமோ படிப்பை முடித்துள்ள பூபதிராஜா அந்தப் பகுதியில் உள்ள தனியார் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரிக்கல் வேலைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி இரவுநேர பணிக்கு சென்று விட்டு மறுநாள் அருகே உள்ள சிப்பிக்குளத்திற்கு எலக்ட்ரிக்கல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

பூபதிராஜா வெகுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அதே கிராமத்தில் உள்ள மற்றொரு வீட்டில் பூபதிராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவரது குடும்பத்தினர் கதறி அழுது உள்ளனர்.


பின்னர், தகவலறிந்த குளத்தூர் காவல் நிலைய போலீசார் அந்தக் கிராமத்திற்கு சென்று தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்த பூபதி ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பூபதி ராஜாவின் செல்போனையும் கைப்பற்றிய போலீசார் அவரது குடும்பத்தினரிடம் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

பூபதிராஜாவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில், அதில் "ஆன்லைன் ரம்மி ஆப்" இருந்ததும், அடிக்கடி அதில் பூபதிராஜா விளையாடியதும் தெரியவந்துள்ளது. இது பற்றி போலீசார் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை செய்ததில், அவரது பெற்றோரும், சகோதரரும் கூறுகையில், "பூபதி ராஜா அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டே இருப்பார் என்றும் தாங்கள் எவ்வளவு கூறியும் சூதாட்டத்தை அவர் நிறுத்தவில்லை என்றும் கூறியுள்ளனர்.

பூபதிராஜா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது பெற்றோர் மற்றும் சகோதரருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் ஒன்றை போலீசார் கண்டுபிடித்தனர். அதில், என்னை மன்னித்துவிடுங்கள். நான் ஏகப்பட்ட கடன் வாங்கிட்டேன்.. அம்மாவின் செயின் ஒன்னையும் அடகு வச்சுட்டேன் 40,000 ரூபாய்க்கு, ஒன்றரை லட்சம் கடன் வாங்கியதில் 30,000 ரூபாய் எடுத்திருக்கேன்,

அதுபோக இந்த மாதம் லோன் தவணையான 6000 ரூபாயை எடுத்த செலவு பண்ணிட்டேன், அதையும் நான் தான் செலுத்த வேண்டும் அதுபோக கம்பெனியில ஒரு பையன்கிட்ட 2000 ரூபாய் வாங்கியிருக்கேன்.. அதையும் குடுக்கல. இந்த மாத சம்பளமும் செலவு பண்ணிட்டேன். மன்னிச்சிரு - என்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உருக்கமாக பேசியுள்ளார்.

இதுபற்றி அவரது குடும்பத்தினர் கூறுகையில், பூபதிராஜா அடிக்கடி செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டே இருப்பார் என்றும், அவர் பேசிய அந்த ஆடியோவை கேட்ட பின்பு தான் இவ்வளவு கடன் வாங்கி இருக்கிறார் என்று தெரியவந்ததுள்ளது என்றனர்.

இதுதவிர, தங்களுக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 32 கிராம் செயினையும் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி தூத்துக்குடி இந்தியன் பேங்கில் 40 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து ஆன்லைன் ரம்மியில் விளையாடி இழந்துள்ளார் என்றும் பூபதிராஜாவை போல் இனி யாரும் இந்த ஆன்லைன் ரம்மியால் உயிர் இழக்கக்கூடாது என்பதால் அரசு உடனடியாக இந்த விளையாட்டை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர்  கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

ஆன்லைன் ரம்மியை அரசு தடை செய்துவிட்டாலும் அந்த விளையாட்டுக்கு அடிமையானவர்களின் தற்கொலை தொடர் கதையாக நீடித்துக் கொண்டே இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News