விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய போலீசார்: எஸ்பி பரிசு வழங்கி பாராட்டு

தூத்துக்குடியில் விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி பரிசு வழங்கி பாராட்டு.

Update: 2021-09-21 12:09 GMT

தூத்துக்குடியில் விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடியில் விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரது உயிரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே கடந்த 18ம் தேதியன்று மாலை 6 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலை விபத்தில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை சுற்றி பார்த்துக் கொண்டிருந்த 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவரை காப்பாற்ற முன் வரவில்லை. ஆனால் அந்த வழியாக வந்த தூத்துக்குடி மாவட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர்கள் சக்தி மாரிமுத்து, டேவிட் ராஜன், சண்முகையா, சுடலைமணி மற்றும் மகேஷ் ஆகியோர் சற்றும் தாமதிக்காமல் வந்த காவல் வாகனத்திலேயே அவரை ஏற்றி மருத்துவமனை கொண்டு சென்று அனுமதித்து, அவரது உயிரைக் காப்பாற்றினர்.

இதனை அப்போது பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், தான் உட்பட அங்கு நின்று கொண்டிருந்த யாரும் அவரை காப்பாற்ற முன் வராத நிலையில் போலீசார் காப்பாற்றியது குறித்து போலீசாரின் இச்செயலை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய போலீசாருக்கு இன்று (21.09.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.

இதுபோன்று பாதிக்கப்படுபவர்களுக்கு காவல்துறை மட்டுமல்ல பொதுமக்களும் உதவுவதற்காகவே அரசு 2014ம் ஆண்டு 'குட் சமாரிட்டன் சட்டம்" என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. இதன்படி இதுபோன்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருப்பவர்களை பொதுமக்கள் மனிதாபிமானத்தோடு, அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதிக்கலாம், உதவுபவர்கள் பெயர் மற்றும் முகவரி போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை, அதே போன்று காவல்துறைக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.

பொதுமக்களில் பலர் இதுபோன்று பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பார்கள் ஆனால் காவல்துறையால் சாட்சி, அது, இது என்று தங்களுக்கு பிரச்சனை ஏதும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உதவ யாரும் முன்வருவதில்லை. உதவி செய்ய முடியாவிட்டாலும் அவசர மருத்துவ சிகிச்சைக்கு இலவச தொலைபேசி எண் 108 அல்லது காவல்துறையின் இலவச அவசர உதவி எண். 100க்கு பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். ஆகவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, அவர்களது உயிரைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News