தூத்துக்குடியில் செல்பி பாயிண்ட் துவக்கம் அமைச்சர், கலெக்டருடன் செல்பி எடுத்த எம்.பி கனிமொழி

தூத்துக்குடி எம்,பி கனிமொழி நம்ம தூத்துக்குடி என்ற செல்பி பாயிண்ட்டை திறந்து வைத்து செல்பி எடுத்துக் கொண்டார்.

Update: 2022-10-22 07:43 GMT

துாத்துக்குடி நிகழ்ச்சியில்  செல்பி எடுக்கும் எம்.பி கனிமொழி 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும், தூத்துக்குடி தொகுதி எம்,பியுமான கனிமொழி கருணாநிதி தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அவ்வாறு வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்தபோது செல்பி எடுத்துக்கொண்டது அதிகாரிகள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

லேட்டஸ்ட் செல்பி:

அப்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகாரட்சி நிர்வாகம் சார்பில், மாநகருக்குட்பட்ட ஜெயராஜ் ரோட்டில், அழகுசேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நம்ம தூத்துக்குடி என்ற செல்பி பாயிண்ட்டை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

தொடர்ந்து, அந்த செல்பி பாயிண்ட் முன்பு நின்று தனது செல்போனில் அவர் செல்பி எடுத்துக் கொண்டார். அப்போது, தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர்  கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,  கலெக்டர் கி. செந்தில்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


படவிளக்கம்:துாத்துக்குடியில்  நடந்து வரும்  மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த எம்.பி.கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர்.அருகில் கலெக்டர், மற்றும் அதிகாரிகள். 

மழைநீர் வடிகால் பணிகள்:

மேலும், தூத்துக்குடியில் உள்ள பக்கிள் சாலை, நான்காம் ரயில்வே கேட், வி.எம்.எஸ் நகர், மாடக்குளம், குறிஞ்சி நகர், ரஹமத் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு எம்.பி.கனிமொழி  ஆய்வு செய்தார்.

பருவமழை தொடங்குவதற்கு முன்பு அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்ட அவர், வரும் மழைக்காலத்தில் எந்த சூழலிலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை:

அதன்பிறகு செய்தியாளர்களிடம்எம்.பி கனிமொழி . பேசியது:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் 65 சதவீதம் முடிவடைந்துள்ளது. விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரணை செய்ய வேண்டும் என்பது பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கையாக உள்ளது. எனவே, அதனை தமிழக முதல்வர் விசாரித்து முடிவு எடுப்பார் எனஎம்.பி கனிமொழி  தெரிவித்தார்.

தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்றஎம்.பி., கனிமொழி  தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு தூத்துக்குடி  கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Tags:    

Similar News