வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கண்பார்வை கிடைக்க உதவிய கனிமொழி

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கண்பார்வை கிடைக்க கனிமொழி எம்.பி. உதவி உள்ளார்.

Update: 2023-12-27 16:39 GMT

தூத்துக்குடி மாவட்டம் மேலாத்தூரில் கண்பார்வை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கண்அறுவை சிகிச்சைக்கு உதவுவதாக கனிமொழி எம்.பி. உறுதி அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்யச் சென்ற கனிமொழி எம்.பி., ஒரு கிராமத்தில் கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியை பார்த்ததும் அவரது கண் மருத்துவச் சிகிச்சைக்கான செலவை ஏற்பதாக உறுதியளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர் - சொக்கப்பழங்கரை ஊராட்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்தார்.

மேலாத்தூர் மற்றும் சொக்கப்பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வசித்து வரும் மக்கள் வெள்ளத்தால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாக வேதனை தெரிவித்தனர். 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து பொருட்களை இழந்துள்ள தகவலை கனிமொழியிடம் தெரியப்படுத்தினர்.

அப்போது சொக்கப்பழங்கரை கிராமத்தில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்யும் பொது, கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியைக் கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை கோளாறு குறித்து அக்கறையோடு விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் ஏழாம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறியவர், தனக்கு கண் பார்வை பிரச்சனை இருப்பதாகவும் அதற்கு மருத்துவச் சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து சற்றும் யோசிக்காத கனிமொழி, அவ்வளவு தானே சரி செய்துவிடலாம் என நம்பிக்கை பொங்க அந்தச் சிறுமியிடம் பேசி ஊக்கமும் உற்சாகமும் அளித்து, ஆன் தி ஸ்பாட்டில் உடனடியாக, கண் மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். விரைவில் மாணவி ரேவதிக்கு கண் பார்வை பிரச்சனை சரி செய்யப்படும் என்ற உறுதியை அந்தச் சிறுமியின் பெற்றோரிடம் அளித்தார்.

அநேகமாக மதுரையிலோ அல்லது சென்னையிலோ உள்ள பிரபல கண் மருத்துவமனையில் சிறுமி ரேவதிக்கு கண் பார்வை கோளாறுக்கான சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிகிறது. தங்கள் மகளின் எதிர்காலம் என்னாவது என்ற கவலையில் இருந்த ரேவதியின் பெற்றோர் கனிமொழி கொடுத்த உறுதியால் நெகிழ்ந்து விட்டனர்.

Tags:    

Similar News