தூத்துக்குடி மருதூர் அணையில் வெள்ளத்தடுப்பு தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு

Maruthur Dam-தூத்துக்குடி மருதூர் அணைக்கட்டு பகுதியில் நமது முன்னோர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-26 07:59 GMT

Maruthur Dam

Maruthur Dam

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொதிகை பகுதியில் உருவாகி, திருநெல்வேலி மாவட்டம் வழியாக தூத்துக்குடி மாவட்டம், மஞ்சள் நீர்கால்வாய் பகுதியில் கடலில் கலக்கிறது தாமிரபரணி ஆறு. தமிழகத்திலேயே உருவாகி, தமிழகத்திலேயே கடலில் கலக்கும் ஒரே பெருமையைக் கொண்டது தாமிரபரணி ஆறு ஆகும்.

இந்த ஆற்றின் குறுக்கே 8 தடுப்பணைகள் உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் 6 தடுப்பணைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 தடுப்பணைகளும் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணைக்கட்டு மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு மூலம் சுமார் 80 ஆயரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

தாமிரபரணி ஆற்றின் குறுக்கை அமைந்துள்ள அணைகளிலேயே மிகவும் பழமையான அணைக்கட்டு என்பது மருதூர் அணை ஆகும். இந்த அணை 1507 ஆம் ஆண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டுள்ளதாக வரலாற்று பதிவுகள் உள்ளன.

மருதூர் அணைக்கட்டு 4 ஆயிரம் அடி நீளம் கொண்டது. பாம்பு வடிவில் நீளமாக அமைந்துள்ளதால் மருதூர் அணையை பாம்பு அணை என்றும் அழைப்பது உண்டு. தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் அருகே அமைந்துள்ள மருதூர் அணை பகுதிகளிலும் அவ்வப்போது தொல்லியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மருதூர் அணைக்கட்டு பகுதிக்கு சென்ற திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பயோ டெக்னாலஜி துறையின் பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் அங்குள்ள ஒரு சிறிய பாறையின் மேலே செங்கற்களால் கட்டப்பட்டதைக் கண்டு வியப்படைந்தார்.

தொடர்ந்து அவர் மேற்கொண்ட ஆய்வு குறித்து கூறியது வருமாறு:-

மருதூர் அணைக்கட்டின் கீழ்பகுதியில் ஆற்றின் நடுப்பகுதியில் ஒரு பெரிய சுண்ணாம்பு பாறை உள்ளது. அந்த பாறையின் நடுவே செங்கல் கட்டுமான அமைப்பு ஒன்றை கண்டுபிடித்தேன். அந்த செங்கல் கட்டுமானம் 6 செங்கல் அகலத்திலும், 20 செங்கல் நீளத்திலும் உள்ளது. மேலும் அதில் இருந்து உடைந்து விழுந்த செங்கல் கட்டுமான அமைப்பு பாறைக்கு அருகிலேயே கிடக்கிறது. அது 40 அடுக்கில் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது.

பாறைக்கு மேலே செங்கற்களால் ஏன் கட்டுமானத்தை ஏற்படுத்த வேண்டும் என ஆராய்ச்சி மேற்கொண்டேன். இதுதொடர்பாக தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று எழுத்தாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டோம். பொதுவாக தற்போது அணையில் இருந்து எவ்வளவு தண்ணீர் வெளியேறுகிறது என்பதையும், அணைக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது என்பதையும் தொழில்நுட்பங்கள் மூலமாக எளிதாக கண்டறிந்து விடுகிறோம்.

ஆனால், போதிய தொழில்நுட்பம் இல்லாத 500 ஆண்டுகளுக்கு முன்பு அணையை சுற்றி உள்ள மக்கள் வெள்ளம் வருவதை அறிந்து கொள்ளும் வகையில் நமது முன்னோர்கள் பாறையின் மேலே செங்கற்களைக் கொண்டு சிறிய அளவிலான சுவரை எழுப்பி உள்ளனர். அதற்கு மேல் தண்ணீர் சென்றால் அபாயம் என்பதை மக்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள் என்பதற்காகவே பாறையின் மீது இந்த சுவர் எழுப்பப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மேற்கண்டவாறு பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News