தூத்துக்குடியில் செப்.24 -இல் ஏற்றுமதி வழிகாட்டி கருத்தரங்கு - கண்காட்சி

வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலகமும் இணைந்து நடத்துகின்றன

Update: 2021-09-22 05:11 GMT

தூத்துக்குடியில் வருகிற 24 -ஆம் தேதி ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட தகவல்: நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில், "வர்த்தக மற்றும் வணிக வாரம்" அனுசரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், இந்தியாவின் ஏற்றுமதியினை உலகளவில் மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலகமும் இணைந்து நடத்தும் ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி எதிர்வரும் 24.09.2021 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி எட்டையபுரம் சாலையிலுள்ள ஏவிஎம் கமலவேல் மஹாலில் நடைபெற உள்ளது.

இக்கருத்தரங்கில், ஏற்றுமதி குறித்த ஆலோசனைகள், வாய்ப்புகள் மற்றும் திட்ட விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன. எனவே ஏற்றுமதி செய்ய ஆர்வமுள்ள இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவனத்தினர் பங்கேற்று வல்லுநர்களின் விளக்கங்களை பெற்று பயன் பெறலாம். 

Tags:    

Similar News