தூத்துக்குடியில் ஏற்றுமதியில் ஏற்றம்: வழிகாட்டி கருத்தரங்கு

2030 -ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் ஏற்றுமதி வளர்ச்சியினை 100 பில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கி செயல்படுகிறது

Update: 2021-09-24 17:00 GMT

தூத்துக்குடியில் நடைபெற்ற  ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கை தொடக்கி வைத்த  தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி

தூத்துக்குடியில்  ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு இன்று (24.09.2021) நடைபெற்றது.

தூத்துக்குடி ஏவிஎம் கமலவேல் மகாலில் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலையில்  நடைபெற்ற கருத்தரங்கை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடக்கி வைத்து பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் முனைவோர், தொழில் தொடங்குவோருக்கு உகந்த ஊராகும். புதியதாக தொழிலை கண்டுபிடித்து ஆர்வத்தோடு தொழில் செய்யும் இடம் தூத்துக்குடி ஆகும்.

இப்பகுதியில் துறைமுகம் இருப்பதால் மீன் உள்ளிட்ட எண்ணற்ற பல பொருட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பகுதியில் தொழில் முனைவோருக்கு முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஆகியோர் முன்னாள் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து பல்வேறு உதவிகளை செய்து தந்துள்ளார்கள். மேலும் பல்வேறு திட்டங்களை இப்பகுதியில் செயல்படுத்தி வருகிறார்கள். கடந்த காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுதும், இப்பகுதியில் மழை காலங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை நேரடியாக களத்திலும் சென்று பணியாற்றி இருக்கிறார்.

இப்பகுதியில் தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் ஏற்றுமதி வளர்ச்சியினை 100   பில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுவதாக  தெரிவித்தார். இப்பகுதியில் அறைகலன், பூங்கா, டைட்டில் பார்க் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். சிப்காட்டில் உள்ள பிரச்னைகளை தொழில்துறை அமைச்சர்  சரி செய்து தருவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்கள். இதன் மூலம் தொழில் முனைவோர் சிறப்பாக செயல்படுதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 41,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்ததில் முதல்வர் கையெழுத்து போட்டிருக்கிறார். ஒவ்வொரு துறைகளை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.

தூத்துக்குடியில் அத்தனை பேரும் தொழிலதிபராக தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கனவோடும் சாதாரணமாக கடையில் வேலை செய்யக்கூடிய இளைஞர்களும் அந்த கனவோடுதான் வாழ்க்கையை தொடங்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இளம் தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசால் பெற்று தரப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில் ஏற்றுமதி விரிவாக்கம் செய்யப்பட்டு ஏற்றுமதியின் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிட முடியும்.  மேக் இன் இந்தியா, மேக் இன் தமிழ்நாடு, மேக் இன் தூத்துக்குடி என்ற வகையில் முன்னேறும் என்றார்.

முன்னதாக மத்திய மற்றும் மாநில துறையின் தொழில் முனைவோர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்னலதா, துணை மேலாளர் (DGFT) முரளிதரன், அகில இந்திய தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜோபிரகாஷ், துடிசியா தலைவர் நேரு பிரகாஷ், தூத்துக்குடி மண்டலத்தின் தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் துணை பொது மேலாளர் சுந்தரேஷ்குமார், திருநெல்வேலி பெல் குரூப் குணசிங் செல்லத்துரை, தொழில் அதிபர் தமிழரசன், உதவி இயக்குநர் தொழில் மையம் சாரிஸ், முக்கிய பிரமுகர்கள் ஜெகன் பெரியசாமி மற்றும் அலுவலர்கள், ஏற்றுமதி சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News