பனிமய மாதா ஆலய பெருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும்: மறை மாவட்ட ஆயர்

பிரசித்திபெற்ற பனிமய மாதா ஆலய 439-வது ஆண்டு பெருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டனி பேட்டி

Update: 2021-07-22 14:12 GMT

பிரசித்திபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய பனிமய மாதா பேராலயத்தில் 439-வது ஆண்டு பெருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டனி, ஆலய பங்குதந்தை குமார் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டனி சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலய பெருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை 11 நாள் ஆண்டுப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த வருடம் 439-வது ஆண்டு பெருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் நடைபெறவுள்ளது.

அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெறும். தொடர்ந்து காலை 7 மணியளவில் பேராலயம் முன்புள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்படும். கொரோனா கட்டுபாடுகளால் ஆலயத்தில் திருவிழா திருப்பலி, நற்கருணை ஆசீர், சப்பர பவனி, கொடி பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது. பெருவிழா சிறப்பு திருப்பலிகள், ஆராதனைகள் மற்றும் திருவிழா முக்கிய நிகழ்ச்சிகள் ஆன்லைன் மூலமாக தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

அதேநேரம் ஆலயத்துக்குள் நடைபெறும் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும். அந்நேரங்களில் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி பக்தர்கள் தனித்தனியே ஆலயத்துக்கு வந்து நேர்ச்சைகள் செலுத்தி செல்லலாம். அரசின் கட்டுபாட்டு வழிகாட்டுதல்களை பின்பற்றி பெருவிழா நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு ஆலய சுற்று வளாகத்தில் திருவிழா கடைகள் அமைக்க தடை விதிக்கப்படுகிறது என்றார்.

Tags:    

Similar News