நள்ளிரவு ஒரு மணிக்கு, சூடான சேமியா கேசரி சாப்பிடலாம், வாரீங்களா?

Semiya Kesari -தேனியில் நள்ளிரவு ஒரு மணிக்கு மிகவும் சூடாக கிடைக்கும் உணவு சுவையான சேமியா கேசரி... ரசித்து, ருசிக்க வேகவைத்து தாளித்த கருப்பு சுண்டல் காம்பினேசனும் இருக்குங்க...

Update: 2022-10-10 05:35 GMT

‘கமகம’க்கும் ருசியான சேமியா கேசரி

Semiya Kesari -தமிழகத்தில் 'துாங்கா நகரம்' மதுரை என்பது எல்லோருக்கும் தெரியும். தேனியும் 'துாங்காநகரம்' தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. குறிப்பாக, தென் மாவட்டங்களின் வர்த்தக தலைநகரம் என தேனியை குறிப்பிடலாம். வட மாவட்டங்கள், வட மாநிலங்கள், தென் மாவட்டங்கள், தென் மாநிலங்கள் என நாட்டின் அத்தனை பகுதியிலும் இருந்தும், சரக்குகளை லாரி, லாரியாக வாங்கி, பிற தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதில், தேனி வியாபாரிகள் சாதனையே படைத்து வருகின்றனர்.

ஒரே நாளில் பல நுாறு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அளவுக்கு, தேனியில் ஏராளமான வியாபாரிகள் உள்ளனர். தவிர காய்கறி, பலசரக்கு, வாசனை பொருட்கள், பணப்பயிர்கள், சிறுதானியங்கள் என அத்தனை வகையான வர்த்தகத்திலும் தேனி சிறந்து விளங்குகிறது. முன்பு கேரளா மட்டுமே, தேனி வியாபாரிகளின் இலக்காக இருந்தது. இப்போது நாடு முழுவதும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், தேனியில் பெருகி விட்டனர்.

பகல் நேரங்களில் தேனி நகருக்குள் போக்குவரத்து நெரிசல் காரணமாக, லாரிகளில் சரக்குகளை ஏற்றி இறக்க போலீஸ் தடை விதித்துள்ளது. இதனால் லாரிகள் அனைத்தும் இரவில் தான் தேனிக்குள் வந்து செல்லும். (சில லாரிகள் பகலிலும் குறிப்பிட்ட நேரத்தில் வரும்). இதனால் இரவெல்லாம் தேனிக்குள் சரக்குகளை ஏற்றி இறக்கும் வேலை நடக்கும்.

இந்த தொழிலாளர்களுக்கும், தவிர இப்பணியில் ஈடுபட்டுள்ள பிற நிர்வாகிகளுக்கும் இரவெல்லாம் கண் விழித்து பணி செய்வதால் இரவில் டீ மற்றும் இதர உணவுகள் தேவையாக இருக்கிறது. இதனால் சில கடைகளை திறக்க, போலீசாரே அனுமதித்துள்ளனர்.

அந்த கடைகளில், இரவில் மிகவும் சூடாக கிடைக்கும் உணவு வகைகளில் முதன்மையானது சேமியா கேசரி. நெய், முந்திரி பருப்பு, ஏலக்காய் மணத்துடன் சூடாக இரவு ஒருமணிக்கே சேமியா கேசரி தயாராகி விடும். சில கடைகளில் ரவை கேசரி தயாராகி விடும். இனிப்பான சுவையான இந்த உணவை அத்தனை பேரும் போட்டி போட்டு வாங்கி சாப்பிடுகின்றனர்.

அடுத்த இடம் பிடிப்பது கருப்பு சுண்டல் தான். நன்றாக ஊற வைத்த கருப்பு சுண்டலை, வெடிக்கும் அளவு வேக வைத்து, வெங்காயம், கருவேப்பிலை, கடுகு உளுந்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு தாளித்து வைத்திருப்பார்கள்.

சிலர் சேமியாக கேசரி, சுண்டல் இரண்டடையும் சாப்பிட்டு விட்டு, காபியோ, டீயோ குடித்து விட்டு வேலைகளை தொடர்வார்கள். இதனால் இரவு நேர கடைகளில் இந்த இரண்டு பொருட்களின் விற்பனையும் களை கட்டும். அதிகாலை 4 மணியை நெருங்கிய உடன், வாக்கிங் செல்பவர்கள் கிளம்பி விடுவார்கள். இவர்களின் விருப்ப உணவு பருப்பு போன்டா, (பருப்பு வடை இல்லை) டீ ஆகும். சிலர் கேசரியும், சுண்டலும் சாப்பிடுவார்கள். நன்றாக சாப்பிட்ட பின்னரே, தெம்பாக வாக்கிங் செல்வார்கள். இந்த உணவுகள் அதிகாலை நான்கு மணி முதல் தேனியில் பல கடைகளில் சூடாக கிடைக்கும்.

நாங்களும் இரவு ஒரு மணிக்கு, சாப்பிட்டு பார்த்தோம். அந்த இரவு சூழலா என்ன காரணம் என தெரியவில்லை. சேமியா கேசரி பகலில்சூடாக சாப்பிடுவதை விட.... இரவில் தான் சுவை அதிகமாக உள்ளது. நீங்களும் இரவில் தேனியினை கடந்து செல்ல நேரிட்டால், தவறாமல் சூடான கேசரி, சுண்டலை ஒரு முறை சுவைத்து பாருங்களேன்....




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News