8 ஆயிரம் ஏக்கர் தமிழக வனப்பரப்பை கேரள மக்கள் ஆக்கிரமிப்பு: அடித்துச் சொல்கிறார், அன்வர் பாலசிங்கம்..!

தேனி மாவட்டத்தின் வன எல்லைக்குள் உள்ள 8 ஆயிரம் ஏக்கர் வனப்பரப்பை கேரள மாநில மக்கள் ஆக்கிரமித்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-06-14 07:18 GMT

வளைந்து, நெளிந்து அழகாக ஓடுவது தான் இயற்கை எழில் சூழ்ந்த வைகை ஆறு. இந்த படம் எடுக்கப்பட்ட இடம்: ஆண்டிப்பட்டிக்கும் வைகை அணைக்கும் இடைப்பட்ட பகுதி.

தேனி மாவட்டத்தின் வன எல்லைக்குள் உள்ள 8 ஆயிரம் ஏக்கர் வனப்பரப்பை கேரள மாநில மக்கள் ஆக்கிரமித்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகி அதிர்ச்சியை பல மடங்கு கூட்டியுள்ளது. இதுதொடர்பாக, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:

தேனி மாவட்டத்தில் மொத்த பரப்பில் 33 சதவீதம் வன நிலங்கள் உள்ளன. தவிர 3 சதவீதம் நிலங்கள் மேகமலை, வெள்ளிமலை, பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் ஆக்கிரமி்க்கப்பட்டுள்ளன. தேனி- கேரள எல்லையில் உள்ள தேனி மாவட்டத்திற்கு சொந்தமான 8 ஆயிரம் ஏக்கர் வனநிலங்களை கேரள மாநிலத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.

மேகமலை- வெள்ளிமலை பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றும் போது, அவர்களுக்கு மாற்று இடம் வழங்கிய பின்னர் வெளியேற்ற பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் முழுமையாக துணை நிற்கும். அந்த மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது அரசின் தார்மீக கடமை. எனவே இதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். அதேநேரம் வனநிலங்களை பாதுகாப்பதிலும் நாங்கள் தீவிரம் காட்டி வருகிறோம்.

இங்குள்ள மிகப்பெரிய எஸ்டேட்கள், சொகுசு விடுதிகள், தோட்டங்களையும் காலி செய்தே ஆக வேண்டும். ஏழை மக்களை வெளியேற்றும் வனத்துறை எந்த சூழலிலும் பெரிய நிறுவனங்களின் ஆக்கிரமிப்புக்கு துணை போகவும் நாங்கள் அனுமதிக்கவே மாட்டோம். இந்த நிலங்களை மீட்டாலே தேனி மாவட்டத்தில் 2 சதவீதம் வனப்பரப்பு அதிகரிக்கும்.

அதேபோல் 8 ஆயிரம் ஏக்கர் தமிழக வனநிலங்களை கேரள மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து நாங்கள் புகார் செய்து, தமிழக- கேரள அதிகாரிகள் இணைந்து சர்வே செய்தனர். அந்த சர்வேயில் கேரள ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டதால், கேரள அதிகாரிகள் அந்த பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு ஓடி விட்டனர்.

தமிழக அரசும் தொடர்ந்து சர்வே செய்து அவர்களை வெளியேற்ற முயற்சிக்கவில்லை. இப்படி ஆக்கிரமிப்பில் உள்ள வனநிலங்களை மீட்டால் தேனி மாவட்டத்தின் மொத்த வனப்பரப்பு 33 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாக உயர்ந்து விடும். வனப்பரப்பு அதிகரித்து, வனங்கள் பாதுகாக்கப்படும் போது வைகை ஆற்றில் ஆண்டுக்கு 200 நாள் நீர் வரத்து இருக்கும். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் தாகமும், தண்ணீர் தேவையும் முழுமையாக தீரும். மதுரை நகரும் வளம் பெறும். இதற்கு நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் காட்டமாக கூறினார்.

Tags:    

Similar News