சிவகங்கை அருகே நின்ற கார் மீது லாரி மோதி விபத்து :சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி கவிழ்ந்தது

Update: 2021-09-09 08:13 GMT

சிவகங்கை அருகே விபத்துக்குள்ளான மதுரையைச் சேர்ந்த டாக்டரின் கார்

சிவகங்கை அருகே நின்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் மதுரையைச் சேர்ந்த பெண் டாக்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மதுரை, அண்ணா நகரை சேர்ந்தவர் பெண் டாக்டர் இந்திரா ஆதப்பன்(69). இவர் சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு தனியாக தனது காரை ஓட்டிச்சென்றார்.

திருப்பத்தூரிலிருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு, மானாமதுரைக்குச் சென்ற டிப்பர் லாரியைக் கவனிக்காமல் ஒரு திருப்பத்தில் திருப்பியுள்ளார். அப்போது திடீரென லாரியைப் பார்த்த பதற்றத்தில், என்ஜின் அணைந்து, கார் சாலையின் நடுவில் எதிர்பாராத விதமாக நின்று போனதாக கூறப்படுகிறது.

கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த டாக்டர் இந்திரா ஆதப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த, மதகுபட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜேசிபி இயந்திரம் மூலம் காரையும், லாரியையும் அப்புறப்படுத்தினர். காருக்கு அடியில் சிக்கியிருந்த இந்திரா ஆதப்பனின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News