உலக தாய்ப்பால் வார விழா- பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆலோசனை மையம் திறப்பு

புதுக்கோட்டையில் உலக தாய்ப்பால் வார விழா மற்றும் ‘செல்லப்பிள்ளை” பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆலோசனை மையம் திறப்பு

Update: 2022-08-10 11:30 GMT

ஆரோக்கிய குழந்தைகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாராமு பரிசுகள் வழங்கினார்.

புதுக்கோட்டையில் உலக தாய்ப்பால் வார விழா மற்றும் 'செல்லப்பிள்ளை" பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆலோசனை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா மற்றும் 'செல்லப்பிள்ளை" பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆலோசனை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாவது: தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் உலக தாய்ப்பால் வார விழாவினையொட்டி புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு ருத்துவமனையில் 'செல்லப்பிள்ளை" பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆலோசனை மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப் பால். இந்த தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதில் தாய்க்கு மட்டும் பங்கு இல்லை, உடன் இருப்பவர்களும் இதுகுறித்த போதுமான விழிப்புணர்வு பெற வேண்டும்.

தாய்ப்பால் அளித்து வந்தால் குழந்தையின் எடை கூடும், அடிக்கடி சளி பிடிக்காது, ஆஸ்துமா பிரச்னைகள், வயிற்றுப் போக்கு ஏற்படாது. உடல் பருமன், இருதய நோய்கள் தவிர்க்கப்படும். குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். எனவே பொதுமக்கள் அனைவரும் தாய்ப்பாலின் அவசியம் குறித்து உரிய விழிப்புணர்வு பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் ஆரோக்கிய குழந்தைகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் சி.புவனேஸ்வரி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், நகர்மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு, உள்ளாட்சி பிரதிநிதகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News