நாதஸ்வரம், தவில் இசைத்து கிராமிய கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
கொரோனா கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள கிராமிய கரகாட்ட கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமிய நையாண்டி மேள கரகாட்டக் கலைஞர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாதஸ்வரம், தவில், உருமி இசை முழங்கி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட கிராமிய நையாண்டி மேளம், கரகாட்டம், கலைஞர்கள் நல சங்கம் சார்பில், நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் திரண்டு வந்து நாதஸ்வரம் தவில், உறுமி மேள வாத்தியங்களை இசைத்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளராக சோமசுந்தரம் அறிவிக்கப்பட்டார். சோமசுந்தரத்தை தற்போது நீக்கிவிட்டு, புதிய உறுப்பினர் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர், இதை ரத்து செய்து, மீண்டும் கலைமாமணி சோமசுந்தரத்தை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர், செயலாளர் பதவிக்கு நியமிக்க வேண்டும். மாவட்டத்தில் தற்போது கொரோனா காலமாக இருப்பதால் கிராமிய கரகாட்ட கலைஞர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.