7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு இரட்டை ஆயுள்

7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கார்த்திக் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

Update: 2021-07-14 09:00 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (26). இவர் கடந்த 22-7-2018 ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும் தனது அண்ணன் மகள் 7 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து பெற்றோர் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சிறுமியின் சொந்த சித்தப்பா தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து கார்த்திகை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா, 7 வயது சிறுமியை அவருடைய சித்தப்பா கார்த்திக் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இரண்டு பிரிவின் கீழ் எதிரிக்கு தலா இரண்டு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். முன்னதாக ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் தமிழக அரசு வழங்கி விட்ட நிலையில் மீதமுள்ள ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு தொகையை அரசு உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News