எஸ்சி-எஸ்டி விவசாயிகள் மானியத்தில் கிணறு வெட்டி நுண்ணீர் பாசனம் அமைக்கலாம்

ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் கிணறு அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

Update: 2022-08-10 12:00 GMT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனம் அமைத்திட விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து 2022-23 ஆம் ஆண்டில் ரூ.12 கோடி செலவில் மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்துத் தரப்படும் என மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் அவர்கள் பேரவையில் அறிவித்தார்கள். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் பாசன நீர் வசதி இல்லாத இடங்களில் 200 சிறு,குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில்,திட்டம் தயாரிக்கப்பட்டு, நிலத்தடி நீர் பாதுகாப்பான குறுவட்டங்களில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செய்படுத்திட தமிழ்நாடு அரசு 09.03.2022 அன்று ஆணை பிறப்பித்தது.

அரியலூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ள 249 குறுவட்டங்களில் 200 ஆதிதிராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 பாதுகாப்பான குறுவட்டங்களில் உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-2022-ல் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பான குறு வட்டங்களில் உள்ள ஆதிதிராவிட சிறு குறு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.இத்திட்டத்தின் கீழ் இடத்திற்கு ஏற்றவாறு, குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்தல்,நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் நிறுவுதல், பாசன நீரினை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அரசு வெளியிட்ட ஆணையின்படி, 90 மீட்டர் ஆழம் உள்ள குழாய் கிணறு அமைப்பதற்கும் 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதிகபட்சமாக ரூ.3.00 இலட்சமும், மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய 5 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைப்பதற்கு ரூ.75 ஆயிரமும், நீர் விநியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ.20 ஆயிரமும் உச்சவரம்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய இடங்களுக்கு மின்சார இணைப்புகான கட்டமைப்புகள் அமைத்திட ரூ.2.50 இலட்சமும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

அரசினால் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் நிறுவ வேண்டும் என்றால், அதற்கான கூடுதல் செலவினை விவசாயிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும். இத்திட்டத்திற்காக இதுவரை விவசாயிகளை கண்டறிந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரிய விவசாயிகளைப் போல, சிறு மற்றும் குறு ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளும் பயன்பெறும் வகையில்,பாசன அமைப்புகளை உருவாக்கி தங்களது நிலத்தில் சாகுபடியினை மேற்கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில்,தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தினை வேளாண் பெருமக்கள் பயன்படுத்திட செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை புதுக்கோட்டை (நெடுஞ்சாலைத் துறை அருகில், திருக்கோகர்ணம்) தொலைபேசி எண்:04322-221816,உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை புதுக்கோட்டை (நெடுஞ்சாலைத் துறை அருகில், திருக்கோகர்ணம்) அலைபேசி எண்:9994405285 மற்றும் அறந்தாங்கி (இராஜேந்திரபுரம்) அலைபேசி எண்: 9159384364 அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News