நாளை பள்ளிகள் திறப்பு : பல்வேறு பள்ளிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

பள்ளிகளில் கோவிட் தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

Update: 2021-08-31 09:42 GMT

 புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசுமேல்நிலைப்பள்ளியில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் கவிதாராமு. உடன் முதன்மைகல்வி அலுவலர் சாமி.சத்திமூர்த்தி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, மேற்கொள்ள வேண்டிய கோவிட்-19 முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, திருக்கோகர்ணம் அரசுமேல்நிலைப்பள்ளியில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பள்ளிகளில் ஆய்வு செய்தபின்னர் ஆட்சியர் கூறியதாவது:தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, அனைத்துப்பள்ளிகளிலும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வரையிலான வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. அதனடிப்படையில்,  தற்போது புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள்  நேரில்  ஆய்வு செய்யப்பட்டது.

 


இந்த ஆய்வில் மாணவர்களின் வகுப்பறை, மின்விளக்கு வசதி, குடிநீர்வசதி, கழிவறை வசதி போன்ற பல்வேறு வசதிகள் ஆய்வு செய்யப்பட்டது. பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிதல், இடைவெளிவிட்டு அமர்தல், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தவறாது கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் போன்றவை குறித்து அறிவுறுத்தப்பட்டது.

பள்ளிகளில் தவறாது கோவிட் தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டுமென  உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News