தபால் ஓட்டு: காவலர்களிடம் வாக்கு கேட்ட காங்கிரஸ் பிரமுகர்
புதுக்கோட்டை காவலர் சமுதாயக்கூடம் அருகே காவலர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்ட காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் இப்ராஹிம் பாபு.
தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு பணிகளில் ஈடுபடும் காவல் துறையினருக்கு தபால் ஓட்டு போடும் நிகழ்வு இன்று புதுக்கோட்டை சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
இதில் காவலர்களுக்கு தனித்தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு எந்தெந்த பகுதிகளில் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துக் கூறியும், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி என 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டு காவலர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் காவலர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரியாமல், மறைத்து வைத்து வாக்களித்து அதனை வாக்குப் பெட்டியில் செலுத்தினர்.
காவலர் சமுதாயக்கூடம் அருகே வாக்களிக்க வந்த காவலர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் இப்ராகிம் பாபு வாக்கு சேகரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.