கொடநாடு வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்

ஒருவர்எதிர்க்கிறார் என்பதற்காக விசாரணை செய்யாமல் இருக்கமுடியாது. ஏனென்றால் அது முன்னாள் முதல்வரின் கோட்டையாக இருந்தது

Update: 2021-09-04 07:35 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ,பொற்பனைக் கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை, பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்.

கொடநாடு வழக்கில்  விசாரணை செய்ய கூடாது என்று ஒருவர் கூறுவதற்காக விசாரணை செய்யாமல் இருக்க முடியாது. அதில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.

புதுக்கோட்டை மாவட்டம் ,பொற்பனைக் கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். அங்கு நடக்கும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்கள் குறித்து அகழ்வாராய்ச்சி இயக்குனர் இனியனிடம் கேட்டறிந்தார்.

 பின்னர்,  செய்தியாளர்களிடம் பாலகிருஷ்ணன் கூறியதாவது: பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சியில், பண்டை காலத்து மண் பானை ஓடுகள், பல்வேறு விலங்குகளின் எலும்புத் துண்டுகள் பல்வேறு விதமான நவரத்தின மணிகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கிறது.  தற்போது இங்கு நடைபெற்று வரும் அகழ்வு ஆராய்ச்சி பணிக்காக, திறந்தவெளி பல்கலைக்கழகம் ஒரு லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அந்த நிதியிலிருந்து தான் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு பொற்பனைக்கோட்டை அகழ்வாராய்ச்சி பணிக்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும். மத்திய தொல்லியல் துறை மற்றும் மாநில தொல்லியல் துறை ஆகியவை இதுபோன்று அகழ்வாராய்ச்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு தமிழர்களின் கலாசாரம் பண்டை காலத்து வரலாறு ஆகியவற்றை வெளி உலகத்திற்கு கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். கொடநாட்டில் நடைபெற்றுள்ள சம்பவங்களில் ஏராளமான மர்ம முடிச்சுகள் உள்ளது இதனை அவிழ்ப்பதற்கு தான் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

யார் குற்றவாளி என்பதை விசாரணை செய்தால் தான் தெரிய வரும் விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும். ஒருவர் விசாரணையை எதிர்க்கிறார் என்பதற்காக , விசாரணை செய்யாமல் இருக்க முடியாது ஏனென்றால் அது முன்னாள் முதல்வரின் கோட்டையாக இருந்து உள்ளது.அங்கு நடைபெற்றுள்ள பல சம்பவங்கள் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு வேண்டுமென்றால் விசாரணை முழுமையாக நடைபெற வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தக் கூடாது என்பதற்காக மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்யவில்லை, கால அவகாசம் கேட்டு தான் மனு தாக்கல் செய்துள்ளனர். கால அவகாசம் கேட்பது என்பது தேர்தலை தள்ளிப் போடுவதற்கு அல்ல.வார்டு மறுவரையறை செய்வதற்காகத்தான் கால அவகாசம் கேட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை, பழைய பென்ஷன் திட்டம், அகவிலைப்படியை அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. நிதி அமைச்சரின் பலகருத்துகள் ஏற்க கூடியதாக இல்லை. முதல்வர் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கலைஞர் போன்ற  மூத்த தலைவருக்கு நினைவகம் அமைப்பது  சாலச்சிறந்தது .அதற்கு யாரும் மாற்று கருத்து கூற முடியாது.  ஆனால் நிதி நிலையை கருத்தில் கொண்டு நிதியை கூடுதலாக ஒதுக்குவதா அல்லது குறைத்து ஒதுக்குவதா என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும். அதில் நான் கருத்து கூற முடியாது.  தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டு தக்கதாக உள்ளது.படிப்படியாக தான் எந்த அரசும் எதையும் செய்ய முடியும் ஆனால் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

Tags:    

Similar News