புதுக்கோட்டை: கம்பி மேல் ஏறி குதித்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

புதுக்கோட்டையில் கம்பி மேல் ஏறி குதித்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-03-06 09:38 GMT

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக கம்பி மேல் ஏறி குதித்து உள்ளே சென்ற  பா.ஜ.க. நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நடைபெற்று முடிந்த நகராட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் பல்வேறு இடங்களில் டெபாசிட் இழந்து தோல்வியுற்றனர். இந்த தோல்விக்கு காரணம் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட தலைவர்கள் சிறப்பாக பணியாற்றவில்லை என கட்சி நிர்வாகிகள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையிடம் தெரிவித்தனர். அதனையடுத்து நேற்று தமிழகத்தில்  8 மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைவர்கள் நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல வருடங்களாக பா.ஜ.க. மாவட்டத் தலைவராக செயல்பட்டு வந்த சேதுபதி தேர்தல் நேரங்களில் முறையாக பணியாற்றவில்லை என கட்சி நிர்வாகிகள் கூறிய குற்றச்சாட்டையடுத்து பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து சேதுபதி அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி புதிய மாவட்ட பொறுப்பாளராக செல்வ அழகப்பன் நியமிக்கப்பட்டார்.

புதிதாக மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செல்வ அழகப்பன் இன்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் புரட்சி கவிதாசன் தலைமையில் மாலை அணிவிக்க வந்தார்.

அப்போது அம்பேத்கர் சிலை இரண்டு பகுதியும் பூட்டப் பட்டிருந்த நிலையில் அதற்கான சாவியை பல்வேறு இடங்களில் கேட்டும் கிடைக்கவில்லை. இதனால் திடீரென பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் புரட்சிக்கவிதாசன் மாவட்ட பொறுப்பாளர் செல்வா அழகப்பன் மற்றும் தொழில் பிரிவு மாவட்டத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் பூட்டியிருந்த அம்பேத்கர் சிலை கம்பியின் மீது ஏறி குதித்து உள்ளே சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சாவியை வாங்கி வந்த கட்சி நிர்வாகிகள் பின்னர் பூட்டைத் திறந்து மற்ற கட்சி நிர்வாகிகளை அம்பேத்கர் சிலை நுழைவாயில் உள்ளே சென்று மாலை அணிவிக்கச் சென்றனர்.

அம்பேத்கர் சிலைக்கு கம்பியின் மீது ஏறி குதித்து மாலை அணிவிக்க முற்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

Similar News