அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி: எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மனு

சத்துணவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக விராலிமலை பகுதியை சேர்ந்த 7 பேரிடம் 18 லட்சம் மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்தனர்

Update: 2021-08-16 14:08 GMT

 அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க   வலியுறுத்தி   மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளரிடம் மனு அளித்த  பாதிக்கப்பட்ட பெண்கள்


அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கோரி புதுக்கோட்டை எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ். இவர் விராலிமலை மேற்கு ஒன்றிய அதிமுகவில்  சிறுபான்மையினர் அணி பிரிவு செயலாளராக இருந்தார். ஜேசுராஜும் அவரது மனைவி அனுஷா ஆகிய இருவரும் சத்துணவு துறையில் அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக ரூ 6 லட்சம் மோசடி செய்து விட்டதாக மூன்று நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணி என்பவர் விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், ஜேசுராஜ் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த விராலிமலை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது மனைவி அனுஷாவை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஜேசுராஜுவை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில் ஜேசுராஜ் சத்துணவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக விராலிமலை பகுதியை சேர்ந்த 7 பேரிடம் 18 லட்ச ரூபாயை மோசடி செய்துவிட்டதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

அப்போது பாதிக்கப்பட்ட நபர்கள் கூறுகையில்: ஜேசுராஜ் அதிமுகவில் பொறுப்பில் இருந்ததால் கடந்த 2019 -ஆம் ஆண்டு சத்துணவு துறையில் வேலை வாங்கி தருவதாக தங்களைப் போன்ற பலரிடமும் பல லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டதாகவும் பணத்தை திரும்ப கேட்டால் அவர் மிரட்டல் விடுத்தாக காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததாகவும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பணத்தை பெற்றுத் தர வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

Tags:    

Similar News