புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன் விவசாயிகள் மறியல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-03-30 08:11 GMT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன் மறியல் போராட்டத்தில்  விவசாயிகள் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்ட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து  கொண்டனர். அய்யாக்கண்ணு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வதற்கு 40 முதல் 80 ரூபாய் லஞ்சமாக கேட்கிறார்கள் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறினார்.

ஆனால் மாவட்ட ஆட்சியர் கூறிய பதில் திருப்திகரமாக இல்லை எனக்கூறி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத விவசாயிகள் மீண்டும் ஆட்சியர் அலுவலகம் வெளியே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தில் நாள் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றால் அங்கே நெல் கொள்முதல் செய்வதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள்.

மேலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபடும் பெண்களை விவசாய பணிக்கு ஈடுபடுத்த வேண்டும் மேலும் ஒரு நாளைக்கு விவசாயம் செய்வதற்காக குறைந்தபட்சம் பகலில் 6 மணி நேரமும் இரவில் 10 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொலைபேசியில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். 

Tags:    

Similar News