பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் 5 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-07-23 14:00 GMT

புதுக்கோட்டை நியூ டைமண்ட் நகரில் பீரோவை உடைத்து 5 பவுன் நகை ஒரு லட்ச ரூபாய் பணம் கொள்ளை 

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வது வார்டு நியூ டைமண்ட் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜ ராஜன். இவர்  இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு தனது குடும்பத்துடன் காலையில் மதுரைக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருக்கிறார். இதனை அறிந்த கொள்ளையர்கள் பட்டப்பகலிலேயே வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று,  இரண்டு பீரோக்களையும்   உடைத்து அதில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர்.

இதன் பின்னர் மீண்டும் வீட்டை எப்போதும் போல் சாத்தி விட்டு உடைத்த பூட்டை மட்டும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த ராஜராஜன் குடும்பத்தினர் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டதை பார்த்து அதிர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து புதுக்கோட்டை நகர காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

Similar News