பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி புதுகையில் பாஜக ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, புதுக்கோட்டையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைத்த பிறகும், தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கான வாட் வரியை குறைக்க வில்லை. எனவே, உடனடியாக தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பாஜக சார்பில் புதுக்கோட்டை அண்ணா சிலையில் இருந்து, பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மாட்டு வண்டியில் சென்று மனு அளிப்பதற்காக முடிவு செய்தனர்.
ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி வழங்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையை கண்டித்தும் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.