வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

Update: 2021-02-08 06:30 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக காவல்துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு நபர் போலீசாரை பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை திருப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து போலீசார் அவரை விரட்டி பிடித்து விசாரணை செய்யும் போது அவர், பெரம்பூர் அருகே உள்ள புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை (42) என்பதும் இவர் திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரில் உள்ள ராஜா (22) என்ற நபருடன் சேர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து பொன்னுத்துரை கொடுத்த தகவலின் பேரில் ராஜாவை கைது செய்த போலீசார் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் சிதம்பரம் பகுதியில் திருடப்பட்ட ஒரு கார் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவருக்கு பின்னால் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளார்களா மேலும் இவர்கள் எத்தனை வாகனங்களை திருடி உள்ளார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News