மோகனூர் சர்க்கரை ஆலையில் ரூ.8 கோடி மதிப்புள்ள ஸ்பிரிட் தேக்கம்

கடந்த 3 மாங்களாக விற்பனை செய்யாமல், 8 கோடி ரூபாய் மதிப்புள்ள, 18 லட்சம் லிட்டர் ஸ்பிரிட் நிலுவையில் உள்ளது.

Update: 2023-02-01 11:00 GMT

பைல் படம்.

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், உற்பத்தி செய்யப்பட்டு, கடந்த 3 மாங்களாக விற்பனை செய்யாமல், 8 கோடி ரூபாய் மதிப்புள்ள, 18 லட்சம் லிட்டர் ஸ்பிரிட் நிலுவையில் உள்ளது. அதை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் சர்க்கரைத் துறை ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் மணிவண்ணன், பொதுச்செயலாளர் மணிவேல் ஆகியோர், தமிழக சர்க்கரைத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், மோகனூரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. நாமக்கல், சேலம், திருச்சி, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளையும் கரும்பை, இந்த ஆலைக்கு பதிவு செய்து வழங்கி வருகின்றனர். இந்த சர்க்கரை ஆலைக்கு, 2022–23ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்தில், கரும்பு சப்ளை செய்யும் அங்கத்தினர்களுக்கு, டன் ஒன்றுக்கு ரூ. 2,821.50 வழங்க வேண்டிய நிலையில், கரும்பு சப்ளை செய்யும் அங்கத்தினர்களுக்கு, டன் ஒன்றுக்கு ரூ. 2,000 மட்டுமே ஆலை நிர்வாகம் வழங்கி வருகிறது.

ஆலையில் இருந்து வழங்கப்படும் ரூ. 2,000-ல், வெட்டுக்கூலி சராசரியாக, டன் ஒன்றுக்கு ரூ. 1,200 முதல், 1,300 ரூபாய் வரை கொடுத்தது போக, டன் ஒன்றுக்கு ரூ. 700 முதல், 800 மட்டுமே மீதமாகிறது. இந்த பணத்தைக் கொண்டு, மீண்டும் கரும்பு தோட்டத்தை பராமரிக்க முடியாதி நிலையில், கரும்பு விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆலைக்கு சப்ளை செய்யப்பட்ட கரும்புக்கு உரிய தொகையை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்காமல் உள்ளதால், விவசாயிகள் ஆலைக்கு வெட்டப்பட்ட மறுதாம்பு கரும்பை பராமரிக்க முடியாமல், மீண்டும் ஆலைக்கு பதிவு செய்யாமல் உள்ளனர். அதனால், சர்க்கரை ஆலைக்கு பதிவாகக்கூடிய கரும்பு பகுதி பதிவு பெருமளவு குறைவு ஏற்பட்டுள்ளது. மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எரிசாராய ஆலை இயங்கி வருகிறது.

இந்த ஆலையில், உற்பத்தி செய்யப்பட்டு, கடந்த 3 மாதங்களாக விற்பனை செய்யாமல், ரூ. 8 கோடி மதிப்புள்ள, 18 லட்சம் லிட்டர் ஸ்பிரிட் நிலுவையில் உள்ளது. அந்த ஸ்பிரிட்டை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை, இம்மாத இறுதிக்குள் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News