கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நல்லிபாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அடுத்த லக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி, இவரது மகன் தினேஷ்குமார் (17). அவர், நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். பள்ளி விடுமுறை விடப்பட்டதால், அவர் சம்பவத்தன்று மதியம் 1 மணிக்கு, நல்லிபாளையத்தில் உள்ள வைத்தியலிங்கம் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.
அப்போது, கிணற்றில் தவறி விழுந்த தினேஷ்குமார், நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கிணற்றில் இருந்து மாணவர் உடலை மீட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.