நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டாரத் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும், டேங்க் ஆபரேட்டர்களுக்கு சிறப்பு காலமுறை சம்பளம், ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவற்றை வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் முடித்தவர்களுக்கு பணிக்காலத்தை கருத்தில் கொண்டு இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்க வேண்டும்.
தூய்மை பாரதம் உருவாக துணை நின்று உழைத்திடும் மாவட்ட, வட்டார, சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளமாக மாதம் ரூ. 20,000 வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில், மாவட்டத் தலைவர் சங்கீதா, பொருளாளர் சுப்பிரமணி, ஒன்றிய அனைத்து கிராம பஞ்சாயத்து செயலாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.