புதுச்சத்திரம் அருகே அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி

புதுச்சத்திரம் அருகே காரைக்குறிச்சிப்புதூரில், அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை, திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Update: 2022-06-14 06:45 GMT

காரைக்குறிச்சிப்புதூரில், தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்ட காட்சி.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்,காரைக்குறிச்சிப் புதூர் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியில் தமிழக முதல்வர் கொரோனா ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கு செய்த உதவிகள், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி படங்கள், விவரங்கள் இடம்பெற்று இருந்தது.

மேலும் 75-வது சுதந்திர தினவிழாவில், கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை முதல்வர் ஏற்றி வைத்த நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சி, 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு உத்தரவு வழங்குவதின் துவக்க விழா, நீர்வளத்துறையின் சார்பில் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தல் போன்ற நிகழ்வுகளின் புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கிய நிகழ்ச்சி, கொரோனா தடுப்பூசி போடும் முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதனை சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்த பயன்பெற்றனர்.

Tags:    

Similar News