இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கேட்டு மனு

நாமக்கல் அருகே, மேட்டுப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் மக்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2022-04-05 01:00 GMT

நகைக்கடன் தள்ளுபடி வழங்கக்கோரி, நாமக்கல் அருகே, மேட்டுப்பட்டி இலங்கை தமிழர்கள் முகாமில் வசிக்கும் மக்கள், மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்கள் சிலர் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், அருகே எம்.மேட்டுப்பட்டியில் இருக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 25 இலங்கை தமிழர்கள், அருகில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் பெற்றுள்ளனர். இந்த நகை கடனுக்கு அரசு அறிவித்தபடி தள்ளுபடி வழங்காமல், அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட மறுவாழ்வு அலுவலர், தாசில்தார் உள்ளிட்ட பலரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுபோல் சேலம், தர்மபுரி, பவானிசாகர் போன்ற இடங்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே மேட்டுப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கும், நகைக்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்று அவர்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News