நாமக்கல் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை, காணொளி வாயிலாக, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Update: 2021-10-08 02:00 GMT

நாடு முழுவதும், கொரோனா 2வது அலை தாக்கத்தின்போது, பல ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்தனர். இதனையடுத்து, பிரதமர் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அரசு ஆஸ்பத்திரிகளில் நிமிடத்துக்கு 1,000 லி ஆக்சிஜன் வாயு உற்பத்தி செய்யும் வகையில், பிரத்யேக மையங்களைத் தொடங்க பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில், ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோ கான்பரன்ஸ் மூலம் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி திறந்து வைத்தார். நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் ஸ்ரேயாசிங், நாமக்கல் எம்.பி சின்ராஜ், அரசு மருத்துவக் கல்லூரி டீன் அலுவலர் சாந்தா அருள்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில் உள்ள சாதனங்கள் காற்றில் இருந்து நைட்ரஜனை பிரித்தெடுத்து, ஆக்சிஜன் வாயுவை மட்டும் உற்பத்தி செய்யும். அவை குழாய் வழியாக மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையங்களுக்கு நேரடியாக அனுப்பப்படும். இது நிமிடத்துக்கு 1,000 லி. ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். ஏற்கெனவே ராசிபுரம், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் பயன்பாட்டில் உள்ளது என்றனர்.

Tags:    

Similar News