நாமக்கல்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 684 வாக்குச்சாவடிகள் தயார்

நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 684 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

Update: 2021-11-09 05:15 GMT

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கு கடந்த 1-ம் தேதி அன்று இந்திய தேர்தல் கமிஷனால் வெளியிடப்பட்டுள்ள, தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நாமக்கல் நகராட்சியில் 108 வாக்குச்சாவடிகளும், குமாரபாளையம் நகராட்சியில் 70 வாக்குச்சாவடிகளும், ராசிபுரம் நகராட்சியில் 51 வாக்குச்சாவடிகளும், திருச்செங்கோடு நகராட்சியில் 88 வாக்குச்சாவடிகளும் மற்றும் பள்ளிபாளையம் நகராட்சியில் 43 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 5 நகராட்சிகளில் 360 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆலாம்பாளையம், அத்தனூர், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மல்லசமுத்திரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, படைவீடு, பாண்டமங்கலம், பரமத்தி, பட்டணம், பிள்ளாநல்லூர், பொத்தனூர், ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, சேந்தமங்கலம், பரமத்திவேலூர், வெங்கரை மற்றும் வெண்ணந்தூர் உள்ளிட்ட 19 டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் மொத்தம் 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தமாக நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 684 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள 684 வாக்குச்சாவடிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வெளியிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News