போலீசார் தொல்லையில் இருந்து பாதுகாப்பு வழங்க நாமக்கல் எஸ்.பி.யிடம் மனு

போலீசார் தொல்லையில் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி நாமக்கல் எஸ்.பி.யிடம் நகை வியாபாரிகள் மனு கொடுத்தனர்.

Update: 2022-11-22 11:15 GMT

நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளிக்க நகை வியாபாரிகள் வந்தனர்.

ராசிபுரத்தில் செய்யாத குற்றத்திற்காக, போலீஸ் தொல்லையில் இருந்து, பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, நகை வியாபாரிகள் சங்கத்தினர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

நகை திருட்டு சம்பவம் நடைபெறும் போது, போலீசாரிடம் சிக்கிய குற்றவாளி கொடுக்கும் தகவலின் அடிப்படையில், திருட்டு நகைகளை விற்பனை செய்த கடைக்கு, போலீசார் சென்று நகைகளை மீட்டு, அதை உரியவர்களிடம் ஒப்படைப்பது வழக்கம். நாமக்கல், பரமத்தி வேலூர் பகுதிகளில், நடைபெறும் நகை திருட்டு தொடர்பாக, கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த தகவலின்படி, ராசிபுரத்தில் உள்ள நகை கடைகளுக்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதனால், அதிர்ச்சி அடைந்த நகைக்கடை உரிமையாளர்கள், தங்கள் கடைகளை அடைத்துவிட்டு, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொய் புகாரின் பேரில், போலீசார் தொடர்ந்து, நகைக்கடை உரிமையாளர்களை அச்சுறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், நகைக்கடை உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என, வலியுறுத்தி, ராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளை சார்பில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தலைமையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில மாதங்களாக, ராசிபுரம் நகை வியாபாரிகளிடம் தொடர்ந்து வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து திருட்டு நகை சம்பந்தமாக போலீசார் அச்சுறுத்தியும், தொந்தரவும் செய்து வருகின்றனர். செய்யாத குற்றத்துக்காக, வியாபாரிகளும், தங்களின் கடை பெயர், குடும்ப மானம் கெட்டுவிடக்கூடாது என்ற நோக்கிலும், போலீசாரின் விசாரணைக்கு பயந்தும், சிரமமான சூழ்நிலையிலும், போலீசார் கேட்கும் தங்கத்தை கொடுத்து வருகின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, கடந்த ஒரு மாதத்தில் மட்டும், தொடர்ந்து தங்க நகை வியாபாரிகளை, ஒரே திருட்டுப்பெண்ணை வைத்து, ஏராளமான நகைகளை கடைகளில் இருந்து  பெற்றுச்சென்றுள்ளனர்.

கடந்த, அக்டோபர் 19ம் தேதி மட்டும் புதுச்சத்திரம் போலீசார், ராசிபுரம் நகை வியாபாரியிடம் 13 பவுன் திருட்டு நகை வாங்கியதாக கூறி, 3 பவுன் நகைகளை  பெற்றுச்சென்றனர். நேற்று முன்தினம், பரமத்தி வேலூர் போலீசார், அதே பெண்ணை அழைத்துவந்து, மற்றொரு கடையில், 40 பவுன் என்று சொல்லி, 14 பவுன் கொடுக்கும்படி வற்புறுத்தி உள்ளனர். ஆனால், உண்மை தெரிந்த பின், விசாரணை கைவிடப்பட்டது.  எனவே போலீஸ் தொல்லையில் இருந்து பாதுகாப்பு அளித்து, ராசிபுரம் பகுதி நகை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கொடுத்த  மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News