நாமக்கல் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனை

நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-15 15:45 GMT

நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் ரெய்டு நடத்தி, லஞ்சம் வாங்கிய அதிகாரிகளையும், கணக்கிற்கு அதிகமாக சொத்து சேர்த்த விபரங்களையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில், இன்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், நாமக்கல் மோகனூர் ரோட்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், இயக்கமும் பராமரிப்பு செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் இன்று மாலை, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷினி, ஆய்வாளர் நல்லம்மாள் தலைமையிலான போலீஸார் திடீரென வருகை தந்து சோதனை மேற்கொண்டனர்.

போலீஸ் படையினர் வந்தபிறகு, அலுவலகத்தில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அலுவலக கோப்புகளை துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் பணியில் இருந்த அனைத்து பணியாளர்களிடமும் போலீஸார் சோதனை நடத்தினர்.

மாலை தொடங்கிய சோதனை இரவு 9 மணியைக் கடந்தும் நடைபெற்றது. சோதனையின் முடிவில் அங்கு கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூ. 85,900 மற்றும் ஆவனங்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து மாவட்ட லஞ்சா ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணயில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News